Thursday 21 June 2012

உலக தொலைகாட்சிகளில் முதன்முறையாக

தலைப்பு பார்த்துட்டு என்ன யோசிக்கிறீங்க .மேலே படிங்க கொஞ்சம் செய்தி இருக்கு .நான் இங்கே சொல்லப்போற செய்தி யாரேனும் பதிவிட்டு கூட இருக்கலாம் .இருந்தாலும் நானும் எழுதவேண்டியதாக இருக்கிறது .

சென்றவார ஜூனியர் விகடனை வாசித்து கொண்டு இருந்தேன் .அதில் ஒரு செய்தி எங்க அப்பா மூணு கொலை செய்து புதைத்துவிட்டார் என .செய்தியை படித்து முடித்துவிட்டு கொஞ்சம் நேரம் அமைதியாக அதே நேரம் சிந்தனை வயப்பட்டவனாக அமர்ந்துவிட்டேன் .

சதீஷ் ,பார்கவி இவர்கள் காதலர்கள் .இவர்கள்  காதலர்களை சேர்த்துவைக்கும் தனியார் தொலைகாட்சி  நிகழ்வில் கலந்து இருக்கின்றார்கள் .அங்கே பார்கவியின் அப்பாவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார் .பார்கவி தன் அப்பாவோடு செல்லமாட்டேன் என கூறி அவர் மூன்று கொலைகள் செய்து புதைத்தவர் என சொல்லி இருக்கிறார் .

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு அதை பார்த்த ஜீவா என்ற பெண்மணி கொலையானது தனது கணவரும் ,மகளும் ,மருமகனுமாக இருக்கலாம் என போலீசில் புகார் செய்து இப்பொழுது விசாரணை நடப்பதாக எழுதி உள்ளார்கள் .

என் கேள்வி தொலைகாட்சி நேர்மை பற்றி .ஒரு நிகழ்வு தொலைகாட்சியில் ஒளிபரப்படும் முன்பு பதிவு செய்யப்படுகிறது .அது ஒருவாரமா அல்லது இரண்டு வாரம் கழித்தோ ஒளிபரப்படும் .நிகழ்ச்சி பதிவு செய்யப்படும்போது அதில் கலந்துகொண்டு இருக்கும் ஒரு நபர் கொலையாளி என பெற்ற மகள் சொன்னபோது தொலைக்காட்சியினர் போலீசில் புகார் செய்து இருக்கவேண்டாமா .

நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதை பார்த்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் போய் புகார் கொடுக்கும் வரை அந்த கொலையாளி சுதந்திரமாகவே இருந்துள்ளார் .ஒளிபரப்பட்ட உடனே பொதுமக்களோ அல்லது போலீசோ ஏன் விரைவான நடவடிக்கையில் இறங்கவில்லை .

கணவன் மகள் மருமகன் என மூன்று நபர்கள் காணமல் போனபோதும் அந்த பெண்மணி ஏன் போலீசில் புகார் செய்யவில்லை .தன் அப்பா கொலை செய்தது தெரிந்தும் பார்கவியால் எப்படி ஒரே வீட்டில் நான்கு வருடங்கள் இருக்க முடிந்தது .அடுக்கடுக்காக கேள்விகள் கேக்கலாம் .

இனி வரும்காலங்களில் இப்படி தொலைக்காட்சியினர் விளம்பரம் செய்தாலும் செய்வர் .

உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக கொலைசெய்த சிலமணி நேரங்களே ஆன கொலையாளி எங்கள் தொலைகாட்சியில் தோன்றுவார் .

உலக தொலைகாட்சியில் முதன் முறையாக கொலை செய்வதை நேரடி ஒளிபரப்பு எங்கள் தொலைகாட்சியில் மட்டுமே .

உலக தொலைகாட்சியில் முதன்முறையாக வீடு புகுந்து இளம்பெண்ணை கற்பழிக்கும் காட்சி எங்கள் தொலைகாட்சியில் மட்டுமே .

வன்மம் நிறைந்து காணப்படுகிறது இன்றைய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் .தொடர் நாடகங்கள்தான் சமூக சீர்கேடுகளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது என பார்த்தல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அதை தாண்டி ரேட்டிங் வாங்குவதற்காக வீட்டிற்குள் அத்தனை சீர்கேடுகளையும் அடுப்பங்கரைக்குள் கொண்டுவந்து விடும் போலருக்கு

2 comments: